Friday, June 30, 2017

இது கண்ணீர் காலம்!

மாலை வீட்டில் இருந்து கிளம்பி, நிழற் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, “சந்துருஎன்ற குரல் கேட்டு திரும்பிப் பார்த்தபோது, என் அத்தையின் தோழி (ஏறத்தாழ 65 வயதானவர்) சாலையின் ஓரத்தில் நின்றுகொண்டு என்னை அழைத்தார்கள்.

அருகில் சென்று சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன்அவர் 30 ஆண்டுகளுக்கு முன்னரே செவிலியர் படிப்பு படித்துவிட்டு, எங்கள் ஊரில் உள்ள ஆசியாவின் புகழ்பெற்ற ஒரு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை கூடத்தில் மருத்துவருக்கு உதவியாக வெகு சிறப்பாக பணிபுரிந்தவர்.

5 ஆண்டுகளுக்கு முன்னர்தான் பணி ஓய்வு பெற்றார். அவர் அந்த மருத்துவமனையில் பணியில் இருந்த காலங்களில் ஆண்டுக்கு ஓரிரு முறை எங்கள் வீட்டிற்கு வருவார்அப்போதெல்லாம் அவர் எவ்வளவு மன உறுதியுடன் பேசுவார், அவரின் செயல்பாடும் எவ்வளவு தெளிவாக இருக்கும் என்பதை நானறிவேன்.

30 ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி ஒரு அன்புடன் பழகுவாரோ அதே அன்பு இப்போதும்எப்போது என்னை வழியில் பார்த்தாலும், நான் கவனிக்காமல் சென்றாலும் அவர் என்னை அழைத்து பேசாமல் போகமாட்டார்.

ஆனால்…… இம்முறை அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது, அவரின் பேச்சில் முன்பிருந்த உறுதி இல்லைசற்று தளர்ந்திருந்தார்நான் அவரை அக்கா என்றுதான் அழைத்து பழக்கம்.  “அக்கா, எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டேன்

      அவர் கண் கலங்கியவாறே, “ஏதோ இருக்கிறேன்என்றார்.  “ஏன் அக்கா அப்படி சொல்கிறீர்கள்?” என்று கேட்டேன்

      “மகன் வெளியூரில் பணிபுரிகிறான்என் இரண்டு அக்காக்கள் என்னுடன் இருக்கிறார்கள்மகனுக்கு திருமணம் செய்ய வேண்டும்அவன், "திருமணம் முடிந்தவுடன் வெளிநாடு செல்ல போகிறேன்உங்களை என்னுடன் அழைத்துச் செல்ல இயலாது என்று கூறுகிறான்என்றார்அதைக் கூறி முடிக்கும்போது, அவரையும் அறியாமல் இருவிழிகளிலும் கண்ணீர் பெருக்கெடுத்தது.

      எத்தனை ஆயிரம் அறுவை சிகிச்சையில் மருத்துவருக்கு உறுதுணையாக இருந்து பலரின் கண்ணீரைத் துடைத்தவர். அப்போதெல்லாம் எள்ளளவும் கலங்காமல் இருந்த அந்த கருணையுள்ளம் இன்று வாழ்வின் வெறுமையால் அவர் சிந்தும் கண்ணீரை யார் துடைப்பார்?


      முதுமையே, நீ கண்ணீர் காலமா?

மதம் பிடிக்காத நட்பு

ஒவ்வொரு ஆண்டும் நோன்புப் பெருவிழா நாளில் என் ஆருயிர் பள்ளித் தோழன் என் இல்லத்திற்கு பிரியாணி கொண்டு வந்து அன்புடன் கொடுப்பது வழக்கம்.
இந்த ஆண்டும் வந்திருந்தான். நண்பகல் செல்பேசியில் தொடர்பு கொண்டு, கொஞ்ச நேரம் காத்திருக்க வேண்டும் என்றும், சற்று தாமதம் ஆகிவிட்டது என்றும் வருத்தம் தெரிவித்தான்.
3.30 மணிக்கு வந்திருந்தான். அவன் எப்போது என்னை சந்தித்தாலும், மாநில, தேசிய, உலக அரசியல் பற்றி பேசாமல் செல்லமாட்டான்.
இன்றும் அப்படியே, வந்தார், GDP, மாநில அரசியல், Donald Trump போன்று பலவற்றை பேசினான்.
அவன் பேச்சில் மோடி எதிர்ப்பும் மேலோங்கியது. ஏன் இப்படி கண்மூடித்தனமாக எதிர்க்கிறார்கள் என்று எனக்கு வியப்பாக இருந்தது.
அவன் என் இல்லத்திற்குள் வரும் போது, சேரனின் "பொக்கிஷம்" திரைப்படம் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. அதில் ஒரு இசுலாமிய பெரியவர் பேசிய வசனம், "மதமா? மனிதனா? என்று ஒரு நிலை வந்தால், நான் மனிதன்தான் என்பேன்" என்பார். எங்கள் நட்பிற்கும் இது என்ன ஒரு அருமையான பொருத்தம்!
அவனின் வீட்டிற்குள் செல்ல அனுமதிக்கப்பட்ட வேற்று நபர்கள் நானும் என்னுடைய மற்றொரு நண்பனும்தான். அவனுடைய மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், வேறு யாருக்கும் அவனின் இல்லத்திற்குள் செல்ல அனுமதியில்லை.

பின்னர் எங்கள் பள்ளி கால நினைவுகளை அசைபோட்டோம். மாநில, தேசிய மற்றும் உலக அரசியல் நிலவரம் போன்றவற்றில் எங்களுக்கு எப்போதும் கருத்து வேறுபாடுகள் இருப்பினும், பள்ளியில் தொடங்கி இன்றுவரை தொடரும் உன்னதமான நட்பில் இம்மியளவும் எவ்வித முரண்களும் இல்லை என்பதே உண்மை.

Saturday, June 10, 2017

“சிவன் மனசுல என்ன இருக்கோ? யாருக்குத் தெரியும்?”


சிவன் மனசுல என்ன இருக்கோ? 
யாருக்குத் தெரியும்?”
சமீபத்தில் இந்த வசனத்தை அறியாதவர்களே தமிழ்நாட்டில் இல்லை எனலாம். ஆம். பாகுபலி முதல் பாகத்தில் இடம்பெற்ற வசனம். பாகுபலி இரண்டாம் பாகம் முடியும்போதும் திரையில் இந்த வசனம் எதிரொலிக்கும். இந்த வசனம் எவ்வளவு நிதர்சனமான உண்மை!
என்னுடைய உடன் பிறவா சகோதரரும் நலம் விரும்பியுமான திரு.DMag சரவணன் மற்றும் நண்பர் கோகுல் அவர்களுடன் அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்தபோது, “காஞ்சனகிரிகோயிலுக்கு செல்ல முடிவு செய்து கிளம்பினோம்.
காஞ்சனகிரி வரலாறு: 
 ----------------------------------
திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற திருத்தலமான திருவல்லம்தற்போது திருவலம் என அழைக்கப்படுகிறது. இங்கு சிவபெருமான் வில்வநாதர் என்னும் திருப்பெயரிலும், அம்பாள் பாலகுஜாம்பாள் (இளமுலை நாயகி அம்மன்) என்னும் திருப்பெயரிலும் எழுந்தருளி மக்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
இத்திருத்தலத்திற்கு காஞ்சனகிரி மலையில் இருந்து தினந்தோறும் புனித நீர் கொண்டு வந்து அபிஷேகம் செய்வது வழக்கமாக இருந்தது. இம்மலையில், காஞ்சன் என்னும் அரக்கன் வாழ்ந்து வந்தான். புனித நீர் எடுக்கச் செல்லும் கோயில் அர்ச்சகரை தினந்தோறும் துன்புறுத்தி வந்தான். ஒருநாள் இது எல்லைமீறவே, வில்வநாதீஸ்வரர் நந்தியம்பெருமானை அனுப்பி காஞ்சனை வதம் செய்தார் என்பது வரலாறு.
இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட கஞ்சனின் வேண்டுகோளுக்கிணங்க அவன் தவம் புரிந்த மலை கஞ்சனகிரி எனப் பெயர் பெற்றது. அவனுக்குத் திருக்காட்சித் தந்து மோட்சமளித்த இடம் கஞ்சன ஏரி எனவும், சிரசு விழுந்த இடம் சீக்கராஜபுரம் எனவும், மார்பு விழுந்த இடம் மாவேரி எனவும், வலது கால் விழுந்த இடம் வடகால் எனவும், தென்திசையில் இடது கால் விழுந்த இடம் தெங்கால் எனவும், மணிக்கட்டு விழுந்த இடம் மணியம்பட்டு எனவும், குடல் விழுந்த இடம் குகையநல்லூர் எனவும், நரம்பு முதலான பகுதிகள் விழுந்த இடம் நரசிங்கபுரம் எனவும், மார்பு பகுதியின் சில பாகங்கள் விழுந்த இடம் மருதம்பாக்கம் எனவும், கபாலத்தில் உள்ள நெற்றிப் பகுதி (லாடம்) அல்லது புருவ மத்தி விழுந்த இடம் இலாலாப்பேட்டை எனவும் பெயர் பெற்றன. அசுரனது குருதித் துளிகள் சிந்திய இடங்களில் அவை உருவமற்ற சுயம்பு லிங்கங்களாகக் காட்சியளிக்கின்றன. இவ்வாறு காஞ்சகிரியில் மொத்தம் 1008-க்கும் மேற்பட்ட லிங்கங்கள் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. அவற்றை 1008 சுயம்பு சிவலிங்கங்களாக கருதி மக்கள் வழிபடுகின்றனர்.
வேலூரில் இருந்து இராணிப்பேட்டை பெல் தொழிற்சாலையை கடந்து சென்றால், 2 கி.மீ. தொலைவில் இலாலாப்பேட்டை உள்ளது. இங்கிருந்து 1.5 கி.மீ. தொலைவில் நீண்ட நெடிய மலைப்பாதையில் 10 நிமிடம் பயணம் செய்தால் காஞ்சனகிரி மலை உள்ளது.
இங்கு சுயம்பாக சிவபெருமான் அருள்பாலிக்கிறார். எதிரே, 1891ல் பிறந்து 1973ல் முக்தியடைந்த ஸ்ரீலஸ்ரீ சிவஞான சுவாமிகளின் ஜீவ சமாதியும் அமைந்துள்ளது. அருகில் சப்த கன்னியர் கோயில். ஒரு பெரிய சிவ லிங்கம், ஆஞ்சநேயர் கோயில், வள்ளி தெய்வானை சமேத முருகர் கோயில், நாகலிங்க மரத்தடியில் நாகராஜர் கோயில், எதிரே புனித நீர் குளம் போன்றவை எழிலுற அமைந்துள்ளன. அண்மையில் இராஜகோபுரத்திற்காக பூமி பூஜை இனிதே நடைபெற்றது.
இந்த மலை மீது வந்தவுடனேயே, நம் செவி வழியே எப்போதும் கேட்கும் வெளியுலக இரைச்சலும் நம் மனத்தில் எப்போதும் எழும் குழப்பங்களும் ஒரு நொடியில் நீங்கி ஒருவித அமைதி நிலவுவதை உணரலாம்.
வடக்கு திசையில் இருந்து தொடர்ந்து வீசும் வாடைக்காற்றில், ஒரு வித மந்திர ஒலியை உணரலாம். இந்த வாடைக்காற்று, நம் மனத்தில் உள்ள கவலை, துக்கம், வன்மம் போன்றவற்றை அப்படியே துடைத்து எடுத்துச் சென்றுவிடுகிறது.
மலையில் உள்ள ஊற்றில் இருந்து வரும் குடிநீரை பருகினோம். ஆகா! இதுபோன்று சுவையான நீரைப் பருகி எவ்வளவு ஆண்டுகளானது!
இரண்டு மூன்று சாதுக்கள் அமைதியாக அமர்ந்து உள்ளனர். தியானம் செய்ய மிகவும் ஏற்ற சூழல் இங்கு நிலவுகிறது. இங்கிருந்து பார்த்தால் தூரத்தில் சோளிங்கர் அருள்மிகு லஷ்மி நரசிம்மர் ஆலயம் தெரிகிறது. வடபுறம் பார்த்தால், பொன்னை ஆறு நம் கண்களுக்கு விருந்தாகிறது.
நாங்கள் இங்கு சென்று 2 மணி நேரம் ஆனந்த அனுபவத்தில் இருந்தோம். 2 மணிநேரம், 20 நிமிடங்களாக எங்களைக் கடந்துச் சென்றது. நாங்கள் இங்கு சென்றதும், சாது குடிலில் இருந்த ஒரு வயதான அம்மா, சாப்பிடுங்கள் என்று அழைத்து, பாக்கு மட்டையில் உணவு பரிமாறினார். என்ன சுவையான உணவு! அந்த அம்மா, “பகவானை தரிசிக்க வருபவர்கள் யாரும் சாப்பிடாமல் இங்கிருந்து செல்லக்கூடாது, இன்று நிறைய பக்தர்கள் வந்தார்கள் எனவே இரண்டாவது முறை உணவு சமைத்தேன்என்று கூறினார். நண்பர் கோகுல், “இதுபோல் சுவையான உணவு உண்டு பலநாள் ஆனதுஎன்று அந்த அம்மாவிடம் கூறினார்.
எங்களின் நண்பர் திரு.பாலு அவர்கள், மிகுந்த சிரத்தையோடு இக்கோயிலை நிர்வகித்து வருகிறார். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, வழிபாட்டில் கலந்துகொள்ளும் ஏராளமான பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்கப்படுகிறது.
இங்கிருந்த 2 மணிநேரமும் எங்களுக்குள் ஏற்பட்ட ஆனந்த அனுபவத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. சில நாட்களாக எனக்கு ஒரு சில குழப்பங்களால் ஏற்பட்ட தொய்வானது, நான் கோயிலில் நேரத்தில் தீர்ந்து, அதற்கான வழி ஏற்பட்டது என்பதை, நான் கோயிலில் இருந்து வீட்டிற்கு வந்தவுடன் என் மனைவி கூற மிகவும் பரவசமடைந்தேன்.
மன அமைதி வேண்டுபவர்கள், ஒருமுறையேனும், காஞ்சனகிரிக்கு சென்று வருவது என் அனுபவத்தில் இருந்து நான் தெரிந்துகொண்டது.
அங்கிருந்து கிளம்பும்போது, என் நண்பர்களிடம் நான் கூறியது, “சிவன் மனசில என்ன இருக்கோ யாருக்கு தெரியும்?”
கோயிலைப் பற்றி மேலும் விவரங்களுக்கு :


























Saturday, July 9, 2016

மை


கடந்த வாரம் சனிக்கிழமை மாலை, சத்துவாச்சாரி தெற்கு அவென்யூ சாலை, பகுதி - 2ல் அமைந்திருக்கும் வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு நண்பர் ஒருவரைக் காண சென்றிருந்தேன்.

என் காரை நீதிமன்றத்தின் வெளியே நிறுத்திவிட்டு இறங்கிக் கொண்டிருந்தேன்.
அப்போது, நேர்த்தியாக பேண்ட், சட்டை, ஷுஅணிந்திருந்த 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் என் அருகில் வந்து, "கார் எவ்வளவு மைலேஜ் தருகிறது?" என்று கேட்டார். அதற்கு நான், "ஹைவேயில் சென்றால் 20 வரும் " என்றேன்.


உடனே அவர், "என்னுடைய காரும் மாருதி 800 தான், 1996 மாடல், 25 மைலேஜ் வரும் " என்று கூறி, அருகில் வந்து என்னுடைய காரை பார்த்து "ஓ கேஸ் கிட்டும் இருக்கிறதா?" என்று கேட்க, நான், "ஆமாம், கேஸ், பெட்ரோல் இரண்டும் இருக்கிறது" என்று கூறிவிட்டு நீதிமன்றம் நோக்கி நடந்தேன்.

அவர் என்னுடனே நடந்து வந்து, "நான் என்னுடைய காரை மெயின்டனன்ஸ் எதுவும் செய்வதில்லை ஆனாலும் நல்ல மைலேஜ் கொடுக்கிறது " என்றார்.
நான், "சரி" என்று கூறிவிட்டு நீதிமன்றத்தின் உள்ளே சென்றேன்.
நண்பரை பார்த்து விட்டு திரும்பி வரும்போது அந்த பெரியவர் இருக்கிறாரா? என வழி நெடுக தேடினேன். அவரைக் காணவில்லை. நான் அவரைத் தேட காரணம்,

அவரின்,
முதுமை
தனிமை
வெறுமை

போன்றவற்றின் பாதிப்பில், அந்த வெறுமையான சாலையில் வெறுமையான மனத்துடன் தனிமையில் இணைந்த முதுமையுடன் யாரும் தன்னுடன் பேசாமையால் யாருடனாவது ஏதாவது பேச வேண்டும் என்பதால் என்னுடன் அவர் பேசினார் என்பது என் மனத்தில் கனமாக வலித்தது.

Monday, June 20, 2016

இறைவிகள்


கவுகாத்தி செல்லும் தொடர் வண்டியில் சென்னைக்குப் பயணம் செய்துக் கொண்டிருந்தேன். மேல் படுக்கையில் அமர்ந்துக் கொண்டிருந்தேன்.

இத்தொடரியில் பயணம் செய்யும் போதெல்லாம் திருநங்கைகள் கூட்டமாக பிச்சை எடுப்பதும், 25 வயது மதிக்கத்தக்க மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் கையில் ஒரு துடைப்பத்தை வைத்துக் கொண்டு நகர்ந்தவாறே தொடரியை சுத்தம் செய்துக்கொண்டு, அதற்கான கூலியை ஒவ்வொருவரிடமும் கேட்பது வழக்கம்.

இன்றும் அப்படி கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது கீழே இருக்கையில் வட மாநிலத்தவர்கள் 3 பேரும் தமிழ் பேசும் ஒருவரும் அமர்ந்து இருந்தனர்.

அந்த மூவரில் ஒருவன், வயது 35 இருக்கும், அவனிடம் அந்த பெண் தமிழிலும் இந்தியிலும் கோபம் பீறிட மிகக் கடுமையான வார்த்தைகளை சூறாவளியாய் வீசிக்கொண்டிருந்தாள். என்ன விஷயம் என்று கவனிக்கத் தொடங்கினேன்.

அந்த வட மாநிலத்தவரில் ஒருவன் அப்பெண்ணுக்கு இந்தி மொழி தெரியாது என நினைத்துக் கொண்டு,"உனக்கு பணம் வேண்டும் என்றால் உன் ஆடையை கழற்று தருகிறேன்" என்று மனிதனுக்கே உண்டான மோசமான குரூர எண்ணத்துடன் கேட்டுள்ளான்.

அப்பெண்ணுக்கு இந்தி நன்றாகத் தெரியும். உடனே அப்பெண் அருகி்ல் இருந்த திருநங்கைகளிடம் "அக்கா இவனைப் பாருங்க துணியைக் கழற்று பணம் தருகிறேன் என்று கூறி சிரிக்கிறான்" என்றாள்.

நான்கு திருநங்கைகள் அவனைச் சூழ்ந்துக் கொண்டு தமிழிலும், இந்தியிலும் கடுமையாக திட்டினார்கள்.

நான் அப்போது, சற்று திரும்பி அப்பெண்ணை பார்த்த போது, அவள் என்னிடம் "என்ன அண்ணா இன்னிக்கு திருவநந்தபுரம் டிரெயின் லேட்டா?" என்று கேட்டாள்.
நான் "ஆமாம்" என்று கூறினேன்.

அவள் என்னை அண்ணா என்று அழைக்கிறாளே? அவள் இவ்வளவு மோசமான சூழலில் இருக்கும் போது நான் அவளுக்கு ஆதரவாக எதுவும் செய்யவில்லையே என்று அத்தருணத்தில் எனக்குள் ஒரு குற்ற உணர்வு பரவியது.

தொடரி சென்னையை நெருங்கிக் கொண்டிருந்த நேரம், அந்த திருநங்கைகளில் ஒருவள் அவனுக்கு எதிரில் எழுந்து நின்று அருகில் இருந்தவர்களை "அப்படி போங்கள்" என்று கூறி, அவனைப் பார்த்து, இந்தியில், "உனக்கு என்ன ஆடையை கழட்ட வேணும் அப்படித்தானே?, இதோ இப்போது பார்த்துக் கொள் என்று கூறி தன்னுடைய ஆடையைக் களைந்து அரை நிர்வாணமாக அவன் முன்னால் நின்று, அவனுக்கு சரியானபாடம் புகட்டினாள்.

இச்சம்பவம் நிலநடுக்கத்தை விட கடுமையான அதிர்வுகளை என்னுள் ஏற்படுத்தியது.

அன்று பகவான் கிருஷ்ணர் ஆடையைக் கொடுத்து மானம் காத்தார். இன்று இந்த திருநங்கை தன்னுடைய ஆடையை களைந்து மானம் காத்தாள் .

இந்த திருநங்கைகள் அப்போது எனக்கு இறைவிகளாக காட்சியளித்தனர்.
திருமணத்திற்கு பின்னர் பெண்களின் வாழ்க்கை எப்படியெல்லாம் சீரழிகிறது என்று உரக்கச் சொன்ன இறைவி திரைப்படமும் என் மனத்திரையில் ஓடத் தொடங்கியது.

கனத்த இதயத்துடன்…….  

Monday, May 30, 2016

ஆனந்தக்கூத்தனும்

சர்பத் கடையும்


     வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் அருள் வாய்ந்த கங்கையம்மன் கோயில் உள்ளது.  இக்கோயில் செங்குந்த மரபினர்களால் பல நூறு ஆண்டுகளாக கண்ணும் கருத்துமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.  இக்கோயிலில் உண்டியல் கிடையாது.  



     இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய மூன்று நாட்கள் தேர் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. 

            இந்த ஆண்டு மே மாதம் 24,25 மற்றும் 26ம் நாட்களில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.  26ம் தேதி இத்திருவிழாவின் சிறப்பு நிகழ்வாக “தெருக்கூத்து” நடைபெற்றது.  தெருக்கூத்து கலைஞர்கள் இரவு 9.00 மணிக்கு கோயிலுக்கு வந்துவிட்டனர்.  எந்த ஊரிலிருந்து வந்துள்ளார்கள் என்று அறிந்துக்கொள்ள நானும், என்னுடைய நண்பர்களும் இரவு 09.45 மணிக்கு சென்று பார்த்தபோது, என்னுடைய சிறுவயது நண்பன் ஆனந்தனின் “ஸ்ரீ சக்தி அம்மன்” தெருகூத்து குழுவினர் ஆரணி – பெரணமல்லூரில் இருந்து வந்திருந்தனர்.



            நான் ஆனந்தனை சந்தித்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன்.  புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.  செல்பேசி எண்ணை வாங்கிக் கொண்டேன்.
            “எப்பொழுது கூத்து தொடங்கும்?” என கேட்டேன்.
       “எங்களுக்கு இன்னும் இரவு உணவை கோயில் நிர்வாகத்தினர் அளிக்கவில்லை” என்றான் ஆனந்தன். 


            அப்போது இரவு 09.55 மணி.  இதுதான் இன்றைய தெருகூத்து கலைஞர்களுக்கு உள்ள நிலையா என என்னை நானே கேட்டுக்கொண்டேன்.  இவர்கள் எப்போது சாப்பிட்டு, எப்போது கூத்து தொடங்குவது?  பின்னர் நேரமானதால், நான் வீட்டிற்குச் சென்றுவிட்டேன்.  இரவு படுக்கையில் படுத்தவுடன் தூக்கம் வராமல், என் மனம் 25 ஆண்டுகளுக்குப் பின்னோக்கிச் சென்றுவிட்டது.

            ஆனந்தன் சிறுவயதில் எங்கள் வீட்டு அருகில் இருந்த அவனுடைய மாமா வீட்டிற்கு திருவண்ணாமலை மாவட்டம், நம்பேடு கிராமத்தில் இருந்து வந்தான்.  அப்போது அவனுக்கு வயது 12.  எனக்கு வயது 10. அவன் ஊரில் இருந்த தெருகூத்து குழுவினரைப் பார்த்து அவர்களைப்போலவே பாடுவது, ஆடுவது மற்றும் நடிப்பது என எங்களுக்குச் செய்துக் காட்டுவான். 

            ஒரு கோடைகால விடுமுறையில் சிவன் பார்வதி நாடகம் ஆனந்தன் தலைமையில் இனிதே நிறைவேறியது.  நான் சிவன் வேடமும், எங்கள் எதிர் வீட்டு இசுலாமியப் பெண் பாத்திமா பார்வதி வேடமும் கட்டினோம்.  ஆனந்தன் எங்களுக்கான வசனங்களைச் சொல்லிக் கொடுத்தான்.  ஒப்பனை செய்தான்.  நாடகத்தில் ஒரு பாடலும் பாடினான். தாளம் போடுவதற்கு பழைய வண்ணப்பூச்சி கலன்களையும், ஆணிகளையும் பயன்படுத்தினான். 

        இந்த நாடகம் நடைபெறவிருப்பதை எங்கள் தெருவில் இருந்த அனைத்து சிறுவர்களுக்கும் தெரியப்படுத்தினோம்.  ஏறக்குறைய 20 சிறுவர் சிறுமியர் மற்றும் ஒன்றிரண்டு பெரியவர்களும் இந்த நாடகத்தை வந்து பார்த்தார்கள்.  எங்களுக்கு ஒப்பனை செய்ததும் ஆனந்தனே.  நாடகம் சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்றது.  அப்போது தெரியுமா அவனுக்கு பின்னாளில் தான் ஒரு தெருக்கூத்து குழுவிற்கு வாத்தியார் ஆகப்போவதாகவோ? அதை நடத்தப்போவதாகவோ?

            பின்னர் அவன் எங்கள் ஊரில் இருந்த பால் பண்ணையில் தினக்கூலி பணியாளராக வேலைக்குச் சேர்ந்தான்.  நான் தொடர்ந்து படித்தேன். பின்னர் அவன் அவனுடைய சொந்த ஊருக்கே விவசாயம் செய்ய சென்றுவிட்டான். 

            ஒரு பத்தாண்டுகளுக்கு முன்னர், எங்கள் ஊரில் பொங்கல் விழாவில் ஒரு தெருகூத்து நடைபெற்றபோது, நான் தற்செயலாக சென்று பார்த்துக்கொண்டிருந்தேன்.  அப்போது ஒரு பெண் வேடமிட்டவர், பெண்களுக்குச் சற்றும் குறையாத நளினத்தோடு ஒரு பாடலுக்கு ஆடிக்கொண்டிருந்தார்.  இவர் யார், பெண் போலவே இருக்கிறாரே? எங்கோ பார்த்ததுபோல் இருக்கிறதே? என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.  பின்னர் கூத்து முடிந்ததும், அந்த பெண் வேடமிட்டவர் ஆனந்தன்தான் என அறிந்து, “என்ன ஆனந்தன், எப்போதிலிருந்து தெருகூத்து குழுவில் இணைந்தாய்?” என கேட்டன். “இப்போதுதான் ஒரு ஐந்து ஆண்டுகள் ஆனது என்றான்.”  “விவசாயம் என்ன ஆனது?” என்றேன். “விவசாயமும் கூத்தும் இரண்டற கலந்துவிட்டது” என்றான்.

           அதன் பின்னர் இப்போதுதான் நான் ஆனந்தனைப் பார்த்தேன். ஒரு வாரம் கழித்து, ஒரு திங்கள் கிழமை காலை 7.30 மணிக்கு ஆனந்தனை செல்பேசியில் அழைத்துப் பேசினேன். 

            இரண்டு பிள்ளைகள் என்றான்.  பெரிய பெண் பிள்ளை 10ம் வகுப்பில் 468 மதிப்பெண் எடுத்துள்ளதாகவும், ஆரணி-பெரணமல்லூரில் வசித்து வருவதாகவும், மாதம் 15 நாட்களுக்கு மேல் கூத்து நடத்த நிகழ்ச்சிகள் முன்பதிவு செய்யப்படுவதாகவும், தான் இப்போது இக்குழுவின் வாத்தியார் எனவும், ஒரு கூத்திற்கு தோராயமாக, தொலைவுக்கு ஏற்றாற்போல் ரூ.15,000/-லிருந்து ரூ.25,000/- பெறுவதாகவும் சொன்னான்.  தற்போது கூத்துதான் முழுநேர பணி எனவும் கூறினான்.  இத்தகவல்களைக் கேட்டபோது, ஆனந்தனை திருவிழாவில் பார்த்தபோது என் மனத்தில் நான் கொண்ட “என்ன இப்படி கண்கள் சுற்றிலும் கரு வளையம் சூழ்ந்து, தலை முடியெல்லாம் கொட்டிவிட்டுள்ளதே? அவன் வாழ்வையும் இருள் சூழ்ந்துக் கொண்டதோ?” என்ற கணிப்பினை முற்றிலும் மாற்றிக் கொண்டேன்.    

    பழங்கால கலைகளின் மேல் மக்கள் கொண்டிருந்த ஆர்வத்தை தொலைக்காட்சி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும், திரைப்படங்களும் சிதைத்தும், மீண்டும் மக்கள் இக்கலைகளின்மேல் குறிப்பாக தெருக்கூத்தின்மேல் மீண்டும் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளனர் என்பதை அறிந்து மிகவும் மகிழ்ந்தேன். 

            பழங்கால கலைகளை வளர்க்க, அழிந்துவிடாமல் காக்க ஆனந்தனைப்போல் எத்தனை பேர் தங்கள் வாழ்வை அர்பணித்துள்ளனர் என நினைத்தபோது, திருவிழாவில் நான் கண்ட மற்றுறொரு காட்சியும் பழங்கால உணவுப் பழக்கத்தின் மேல் மக்கள் எவ்வளவு ஆர்வமாக உள்ளனர் என்பதைக் காண நேர்ந்தது.  



          அது ஒரு சர்பத் கடை.  55 வயது மதிக்கத்தக்க பெரியவர்  ஒவ்வொரு ஆண்டும் திருவிழா தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்னர் வந்து கடை போடுவார்.  திருவிழா முடிந்து 10 நாட்கள் வரை கடை இருக்கும்.  இந்த 20 நாட்களும் குறைந்த விலையில் விதவிதமான சர்பத் போட்டுக் கொடுப்பார்.

           இந்த ஆண்டும் அந்த சர்பத் கடையில் கட்டுக்கடங்காத கூட்டம்.  குறைந்தது 15லிருந்து 20 நிமிடங்கள் காத்திருந்து, முண்டியடித்து மக்கள் சர்பத் வாங்கி குடித்துச் சென்றனர்.  நானும் என் நண்பர்களும் 10 நிமிடங்கள் காத்திருந்து, ரூ.10/-க்கு நன்னாரி சர்பத் வாங்கிக் குடித்தோம்.

               சர்பத் கடையில் இருபது வயது மதிக்கத்தக்க இரண்டு ஆண் பிள்ளைகளும் 45 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணியும் சர்பத் போட்டு கொடுத்தனர்.  அந்தப் பெண்மணியிடம், உங்கள் கடையில் ஒரு பெரியவர் இருப்பாரே அவர் எங்கே?” என்று கேட்டேன்.  அதற்கு அந்தப் பெண்மணி, “அவர் என்னுடைய வீட்டுக்காரர்தான். திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார், அதோ அந்த படத்தில் இருக்கிறார்” என்று கடையில் பூமாலை போடப்பட்டு இருந்த அந்த பெரியவரின் படத்தைக் காண்பித்தார். 


அந்த படத்தைப் பார்த்தபோது, அந்த பெரியவர் தன்னுடைய மேற்பார்வையில் இப்போதும் சர்பத் வியாபாரம் செய்வதுபோன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது.  திருவிழாவில் மற்ற பன்னாட்டு குளிர்பானங்களின் வியாபாரத்தைக் காட்டிலும் இந்த சர்பத் கடையில் வியாபாரம் அபாரம்.

          நம் மக்கள் பாரம்பரிய கலையையும், உணவையும் ஒதுக்கவில்லை.  அவர்களுக்கு அவை மறுக்கப்படுகிறன.  பன்னாட்டு நிறுவனங்களாலும், ஊடகங்களாலும் மறைக்கப்படுகிறது.  இதனாலேயே அவர்கள், என்ன கிடைக்கிறதோ அதை பயன்படுத்தும் நிலைக்கு வலுக்கட்டாயமாக தள்ளப்படுகின்றனர்.

     இந்நிலை மாறும் என்பதற்கு இந்த இரண்டு நிகழ்வுகள் எனக்கு ஒரு புதிய நம்பிக்கையையும், உற்சாகத்தையும் கொடுத்தது என்றால் மிகையில்லை.