Monday, June 20, 2016

இறைவிகள்


கவுகாத்தி செல்லும் தொடர் வண்டியில் சென்னைக்குப் பயணம் செய்துக் கொண்டிருந்தேன். மேல் படுக்கையில் அமர்ந்துக் கொண்டிருந்தேன்.

இத்தொடரியில் பயணம் செய்யும் போதெல்லாம் திருநங்கைகள் கூட்டமாக பிச்சை எடுப்பதும், 25 வயது மதிக்கத்தக்க மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் கையில் ஒரு துடைப்பத்தை வைத்துக் கொண்டு நகர்ந்தவாறே தொடரியை சுத்தம் செய்துக்கொண்டு, அதற்கான கூலியை ஒவ்வொருவரிடமும் கேட்பது வழக்கம்.

இன்றும் அப்படி கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது கீழே இருக்கையில் வட மாநிலத்தவர்கள் 3 பேரும் தமிழ் பேசும் ஒருவரும் அமர்ந்து இருந்தனர்.

அந்த மூவரில் ஒருவன், வயது 35 இருக்கும், அவனிடம் அந்த பெண் தமிழிலும் இந்தியிலும் கோபம் பீறிட மிகக் கடுமையான வார்த்தைகளை சூறாவளியாய் வீசிக்கொண்டிருந்தாள். என்ன விஷயம் என்று கவனிக்கத் தொடங்கினேன்.

அந்த வட மாநிலத்தவரில் ஒருவன் அப்பெண்ணுக்கு இந்தி மொழி தெரியாது என நினைத்துக் கொண்டு,"உனக்கு பணம் வேண்டும் என்றால் உன் ஆடையை கழற்று தருகிறேன்" என்று மனிதனுக்கே உண்டான மோசமான குரூர எண்ணத்துடன் கேட்டுள்ளான்.

அப்பெண்ணுக்கு இந்தி நன்றாகத் தெரியும். உடனே அப்பெண் அருகி்ல் இருந்த திருநங்கைகளிடம் "அக்கா இவனைப் பாருங்க துணியைக் கழற்று பணம் தருகிறேன் என்று கூறி சிரிக்கிறான்" என்றாள்.

நான்கு திருநங்கைகள் அவனைச் சூழ்ந்துக் கொண்டு தமிழிலும், இந்தியிலும் கடுமையாக திட்டினார்கள்.

நான் அப்போது, சற்று திரும்பி அப்பெண்ணை பார்த்த போது, அவள் என்னிடம் "என்ன அண்ணா இன்னிக்கு திருவநந்தபுரம் டிரெயின் லேட்டா?" என்று கேட்டாள்.
நான் "ஆமாம்" என்று கூறினேன்.

அவள் என்னை அண்ணா என்று அழைக்கிறாளே? அவள் இவ்வளவு மோசமான சூழலில் இருக்கும் போது நான் அவளுக்கு ஆதரவாக எதுவும் செய்யவில்லையே என்று அத்தருணத்தில் எனக்குள் ஒரு குற்ற உணர்வு பரவியது.

தொடரி சென்னையை நெருங்கிக் கொண்டிருந்த நேரம், அந்த திருநங்கைகளில் ஒருவள் அவனுக்கு எதிரில் எழுந்து நின்று அருகில் இருந்தவர்களை "அப்படி போங்கள்" என்று கூறி, அவனைப் பார்த்து, இந்தியில், "உனக்கு என்ன ஆடையை கழட்ட வேணும் அப்படித்தானே?, இதோ இப்போது பார்த்துக் கொள் என்று கூறி தன்னுடைய ஆடையைக் களைந்து அரை நிர்வாணமாக அவன் முன்னால் நின்று, அவனுக்கு சரியானபாடம் புகட்டினாள்.

இச்சம்பவம் நிலநடுக்கத்தை விட கடுமையான அதிர்வுகளை என்னுள் ஏற்படுத்தியது.

அன்று பகவான் கிருஷ்ணர் ஆடையைக் கொடுத்து மானம் காத்தார். இன்று இந்த திருநங்கை தன்னுடைய ஆடையை களைந்து மானம் காத்தாள் .

இந்த திருநங்கைகள் அப்போது எனக்கு இறைவிகளாக காட்சியளித்தனர்.
திருமணத்திற்கு பின்னர் பெண்களின் வாழ்க்கை எப்படியெல்லாம் சீரழிகிறது என்று உரக்கச் சொன்ன இறைவி திரைப்படமும் என் மனத்திரையில் ஓடத் தொடங்கியது.

கனத்த இதயத்துடன்…….