Wednesday, March 2, 2016

| குடை ஆரஞ்சு |


     வேலூர் மாவட்டம் வள்ளி மலை புகழ் வாய்ந்த முருகன் கோயில்.

     வருடந்தோறும் மாசி மாதத்தில் இங்கு 7 நாட்கள் நடைபெறும் தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

     இந்த திருவிழாவிற்கு சென்றிருந்த போது , சாலையில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம். அவர்களுக்கு இணையாக எங்கு பார்த்தாலும் அன்னதானமும் நீர்,மோர் வழங்கவும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

     சாலையில் தேங்காயை உருட்டி 10 அடிக்கு ஒரு முறை மக்கள் கீழே விழுந்து வணங்கியபடி தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தி சென்றனர்.

     சாலை ஓரத்தில் மூன்று சக்கர தானியங்கி வண்டியில் ஆரஞ்சு பழத்தை மலைபோல் குவித்து விற்றுக் கொண்டிருந்தனர்.

     அவர்களில் ஒருவர் நான்கு ஆரஞ்சு பழங்களை உறித்து அருகில் இருந்து உடைத்துக் கொண்டு வந்த மரக்கிளையில் செருகி "குடை ஆரஞ்ச் ""குடை ஆரஞ்ச் " என சத்தமாக விற்கத் தொடங்கினார்.

     அதுவரை மந்தமாக இருந்த விற்பனை விறுவிறுப்படைந்தது. அரை மணி நேரத்தில் பாதியளவு ஆரஞ்சு பழங்களை விற்று விட்டனர்.

     குடைமிளகாய் தெரியும். குடை ஆரஞ்சு ?

  இது தான் வித்தியாசமாக எதையாவது சொன்னால் மனித மனம் அதன் பால் ஈர்க்கப்பட்டு அது உண்மை என்று நம்பும் தன்மைக்கு எடுத்துக் காட்டு.

     இங்கு பழங்களை விற்றவர் களும் வாங்கியவர்களும் கிராமத்து மனிதர்கள்.

   இதே உளவியல் துணுக்கத்தைக் கொண்டே நம் உடலுக்கு இம்மியளவும் நன்மை புரியா பல பொருட்களை பன்னாட்டு நிறுவனங்கள் நடிகர்களைக் கொண்டும், விளையாட்டு வீரர்களைக் கொண்டும் விற்பனை செய்கின்றன.

 எண்ணெய் செக்கில் தேங்காய் எண்ணெய்யை வாங்கி பயன்படுத்துவதை நிறுத்தினோம், முடி உதிர்வதும் நரைப்பதும் தொடங்கியது.

    கடலை எண்ணெய் சாப்பிட்டால் மாரடைப்பு ஏற்படும் என பயமுறுத்தப்பட்டு அதை திருத்தினோம், மூட்டு வலியும் இருதய சிகிச்சை மையங்களும் பெருகின.

   குடை ஆரஞ்சு என அந்த வியாபாரி விற்று அதை மக்கள் வாங்கி உண்டதால் அவர்கள் உடலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.

 ஆனால் விளம்பரங்களைக் கண்டு ஆராயாமல் நாம் வாங்கி பயன்படுத்தும் பொருட்களால் நம் உடல் நிலை கெடுவதோடு அல்லாமல் நம் அடுத்த தலைமுறையின் உடல் நிலையும் கெடுகிறது. சிந்திப்போம்.


ரியாலிட்டி(Reel) T.V.Show


            திருவனந்தபுரம் - சென்னை விரைவு வண்டியில் சென்னைக்கு பயணம் செய்துக்கொண்டிருந்தேன்.

            மலையாளம் பேசும் ஒரு ஒரு கணவன் - மனைவி அவர்களின் 7 வயது மகள் மற்றும் ஒரு தமிழ் குடும்பம் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ பற்றி வெகு நேரமாக பேசிக் கொண்டிருந்தனர்.

            இதில் உச்ச கட்ட நிகழ்வாக ஒரு மலையாள பாடலை செல்பேசியில் ஒலிக்கச் செய்து அந்த 7 வயது பெண் குழந்தையை ஆடச் சொல்ல, அந்தக் குழந்தையும் ஆடத் தொடங்கியது.

            இடையிடையே அந்தக் குழந்தையின் தாயார், நன்றாக சிரித்துக் கொண்டே ஆட வேண்டும், அப்போதுதான் Audiance support கிடைக்கும்”, “Camera -வை பார்த்து ஆட வேண்டும் என கட்டளைகள் பிறப்பித்துக்கொண்டே இருந்தார்.

            2008-ம் ஆண்டில் ஒரு தொலைக்காட்சி சேனலில் இது போன்ற ஒரு நிகழ்சியில் நான் கலந்துக் கொண்ட பின்னர், இவை அனைத்தும் முன்னரே திட்டமிடப்பட்டு படமாக்கப்படுகிறது என்பதும், அந்த நிகழ்ச்சியை தொகுப்பவர் சர்கஸ் ரிங்மாஸ்டர் போல் செயல்படுவதும் எனக்குத் தெரிந்தது.

            முட்டாள்தனத்திற்கு டிமாண்ட் உள்ளவரை சப்ளை செய்பவர்கள் தொடர்ந்து சப்ளை செய்வார்கள் என என் நண்பர் கூறியது என் நினைவுக்கு வந்தது.

            சற்று நேரத்தில் காற்றில் உருமி சத்தம் என் செவிகளை வந்தடைய, தொடர் வண்டியின் சன்னல் வழியே வெளியே பார்த்தேன்.  அங்கு சாலையில் கழைக்கூத்தாடி தன் இளவயது பெண் குழந்தையை கயிற்றின் மேல், தன் வயிற்றுப் பிழைப்புக்காக நடக்க வைத்துக் கொண்டிருந்ததை பார்த்தேன்.

            அவன் செய்வதிலாவது ஓர் அர்த்தம் இருக்கிறது. பெற்றோரே நீங்கள் செய்வது எதற்காக?


மருதை, மதிரை, மதுரை



     மதுரையில் இருந்து சென்னை நோக்கி செல்லும் தொடர்வண்டியில் பயணம் செய்துக்கொண்டிருந்தேன்.

     முன்னிரவு சரியாக தூங்காததால் சற்று கண்ணயர்ந்தேன். அப்போது மதுரையை சேர்ந்த இரண்டு ஆண்களும்ஒரு பெண்மணியும் கொண்டிருந்தனர்.

     தொடர்வண்டி பயணத்தில் என் தொடர்ச்சியான தூக்கத்தை அவர்களின் பேச்சு தொந்தரவு செய்த போதும் கண்களை மூடிக் கொண்டே சற்று கவனிக்கத் தொடங்கினேன்.

     அவர்களின் உரையாடல் சொத்து வாங்குவது விற்பது பத்திர பதிவு போன்றவற்றை சுற்றியே இருந்தது.

  குறிப்பாக மதுரை தமிழில் அவர்களின் உரையாடல் இருந்தது. "கணக்காப்பிள்ளை ",வையையாறு", "பத்திரம் பதிஞ்சிடலாம், "பொம்பள புள்ளைங்க " , "அங்கிட்டு இங்கிட்டு " , "முடிச்சு விட்டிடலாம்", "வாராங்க", "அப்படித்தே", "அடுத்தாப்பல", "கெட்டிக்காரப் பைய" இப்படி மதுரை பேச்சு வழக்கு தேமதுரதமிழோசையாய் என் செவிகளைத் தொட்டதோடு நில்லாமல் என் சிந்தையையும் தொட்டது. இடையிடையே "அவார்ட்டு", போன்ற இன்ற பிற ஆங்கிலச் சொற்களும் எதிரொலிக்கத் தவரவில்லை. 

      இந்த இரண்டு ஆண்களின் உரையாடலைத்தவிர்த்து, அந்த பெண்மணியின் வார்த்தையில் மட்டும் சென்னை பேச்சு வழக்கு மிகுந்திருந்தது.  அவர் தன்னுடைய ஊர் உசிலம்பட்டி என்றால்.  வெகு ஆண்டுகளுக்கு முன்னரே சென்னைக்கு வந்துவிட்டதாக தன் உரையாடலின் நடுவே கூறினார்.

      இப்படி சுவாரசியம் கூடிக் கொண்டே சென்றபோது, அந்த இரண்டு ஆண்களில் ஒருவருக்கு செல்பேசியில் அழைப்புவந்தபோது, அஸ்லாம்மு அலைக்கும்” என்றதும், என்னையுமறியாமல் நான் கண் திறந்து அவரை பார்த்தேன்.  அவர் ஒரு இசுலாமியர்.  50 வயது மதிக்கத்தக்கவர்.  மற்றொரு ஆண் நபரைப் பார்த்தேன் அவர் 70 வயது மதிக்கத்தக்கவர்.  நரைத்த தலைமுடி. நல்ல திடகாத்திரமான உடல், மதுரை மண்ணின் அடையாளமான பெரிய மீசை. அந்த பெண்மணியைப் பார்த்தேன்.  அவர் 40 வயது மதிக்கத்க்கவர்.

      ஒரு இசுலாமியர் மதுரை மண்ணிலேயே வாழ்வதால் அந்த மண்ணின் பேச்சு வழக்கை சிதைக்காமல் பேசுகிறார்.  அந்த முதியவர் மதுரையிலேயே வாழ்வதால் அவரும் அப்படியே பேசுகிறார்.  ஆனால், வெகு ஆண்டுகளுக்கு முன்னர் சென்னைக்கு வந்து தங்கிவிட்ட ஒரே காரணத்தினால் அந்த பெண்மணி தன்னுடைய மண்ணின் பேச்சு வழக்கை திரித்து சென்னை பேச்சு வழக்கோடு பேசுகிறார்.

      புலம்பெயர்தல் எவ்வாறு கலாச்சாரத்தை மட்டுமல்லாமல் பேச்சு வழக்கையும் திரித்து விடுகிறது என்பதை கண்கூடாகக் கண்டேன். 

      தொடர்வண்டி சென்னையை நெருங்கிக் கொண்டிருந்தபோது, ஆர்வமிகுதியால் அந்த முதியவரிடம் நான் உங்கள் பேச்சை சில மணிநேரங்களாக தொடர்ந்து கவனித்து வருகிறேன், உங்கள் பேச்சைப் பற்றி ஒரு கட்டுரையை இதோ என் செல்பேசியில் எழுதியும் வருகிறேன் என்று கூறினேன்.  அவர் மிகவும் மகிழ்ந்தார்.  நான் என்னை அறிமுகம் செய்துக் கொண்டு, அவரைப் பற்றி கேட்டபோது, அவர் ஊர் நாட்டாண்மையாக இருந்து, பின்னர் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என்று என்னிடம் கூறினார்.  தற்போதும் பஞ்சாயத்து செய்வதை தொடர்வதாகக் கூறினார்.  தற்போது தாம்பரத்திற்கு ஒரு பஞ்சாயத்து செய்வதற்காகச் செல்வதாகவும் கூறினார்.  அவர் அவ்வாறு கூறக் கூற, திரைப்படங்களில் நாம் காணும் மதுரை மண்ணின் பஞ்சாயத்து தலைவர்கள் என் மனத்திரையில் ஒரு கணம் வந்து போனார்கள்.  அந்த இசுலாமியர் மதுரையில் செங்கல் சூளை வியாபாரம் செய்வதாகவும், சென்னையில் ஒரு பிரபல செல்பேசி கடைக்கு தன்னுடைய இடத்தை வாடகைக்கு விட்டுள்ளதாகவும் கூறினார்.  அந்த முதியவரின் செல்பேசி எண்ணை வாங்கிக் கொண்டு, மதுரைக்கு வரும்போது சந்திக்கிறேன் என்று விடைபெற்றேன்.  அவரும், என்னுடைய செல்பேசி எண்ணை வாங்கிக் கொண்டார்.

      அந்த முதியவரும், இசுலாமியரும் கண்ணியம் குறையாமல் பேசிய மொழிநடை, மதுரை மண்ணின் பேச்சு நடை என்னை மெய்சிலிர்க்க வைத்தது.

     


பயணச்சீட்டு


பேருந்தில் இருந்து நான் செல்ல வேண்டிய இடம் வந்து
இறங்கியவுடன் அந்த பயணச்சீட்டை குப்பைத் தொட்டியில்
வீசி எறிந்தேன்.

பேருந்தில் பயணம் செய்யும்வரை தேவைப்பட்ட
அந்த பயணச்சீட்டு இப்போது வெறும் குப்பையானது.


பிறப்பு என்ற நிறுத்தத்தில் ஏறி,
இறப்பு என்ற திருத்தத்தில் இறங்கியுடன்
தேவையில்லாமல் போகிறதே 
நம் உடல்!

தொடர்வண்டி தொல்லைகள்


திருநங்கைகள்
&
பிச்சைக்காரர்கள் போர்வையில் சோம்பேறிகள்

      தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், ஆந்திர மாநிலத்திற்கும் தொடர் வண்டியில் பயணம் செய்கையில், நாம் அன்றாடம் காணும் காட்சி, திருநங்கைகள் தொடர் வண்டியில் பிச்சை எடுப்பது. 

      குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் தொடர்வண்டிகளில் இவர்கள் நாள்தோறும் வந்து, அதிகாரத் தோரணையோடு தூங்கிக்கொண்டிருப்பவர்களையும் தட்டி, அதட்டி எழுப்பி பணம் வசூலிக்கின்றனர் (பிச்சை எடுக்கின்றனர் என கூற அவசியம் ஏற்படவில்லை).  இவர்கள் கேட்கும் குறைந்தபட்ச தொகை ரூ.10/-.

      நான் இத்தகைய தொடர்வண்டிகளில் வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் பயணம் செய்யும்போது, முதலில் என்னிடமும் பணம் கேட்கத் தொடங்கினார்கள்.  பின்னர், நான் தொடர்ச்சியாக பயணம் செய்வதை அறிந்துக்கொண்ட அவர்கள், என்னிடம் பணம் கேட்பதில்லை. இவ்ர்கள் அனைவரும் நன்றாக இந்தி மொழியை பேசி அவர்களிடம் பணம் வசூல் செய்கின்றனர்.  அதில் ஒரு திருநங்கை வயது 40க்கு மேல் இருக்கும், அவர் வடமாநிலத்தவரிடம் பேசும்போது, கோயிலில் திருவிழா நடக்க இருக்கிறது அதற்கு பணம் கொடுங்கள் என்று (இந்தி மொழியில்) கூறியே பணம் வசூலிக்கிறார். மற்றொரு திருநங்கை வயது 50க்கு மேல் இருக்கும், அவர் சற்றே அதிகாரத் தோரணையை குறைத்து பணம் வசூலிக்கிறார்.

      இவர்களைத் தவிர்த்து, கைக்குழந்தைகள், 6லிருந்து 10 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளைகளை ஆகியோரை உடன் அழைத்து வந்து பிச்சையெடுக்கும் சோம்பேறிகள், ஒரு இசுலாமிய பெண்மணி வயது 30க்குள் இருக்கும். ஆரோக்கியமாக இருக்கிறார்.  இசுலாமியரின் பாரம்பரிய உடையை அணிந்துக்கொண்டு, தன்னுடைய 10 வயது மகனுக்கு இசுலாமிய பாரம்பரிய உடையை அணிவித்து, குரானிலிருந்து (உருது மொழியில்) ஏதோ சொல்லிக்கொண்டே பிச்சை எடுக்க வைக்கிறார்.

      இராஜஸ்தானை சேர்ந்த ஒரு பெண்மணியும் தொடர்ச்சியாக தன்னுடைய 10 வயது பெண் பிள்ளையை உடன் அழைத்து வந்து பிச்சை எடுக்கிறார்.


      இவர்களைப் பார்த்து மனம் வெதும்பியபோது, பார்வையற்றவர்கள் தொடர்வண்டியில் விளையாட்டுப் பொருட்கள், கடலை மிட்டாய் போன்றவற்றை விற்பதும், 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் தன்னுடைய ஒரு கால் இல்லாத நிலையிலும், ஊன்றுகோல் உதவியுடன் இதுபோன்ற பொருட்களை விற்று உழைத்து சம்பாதிப்பதும் இந்தியா சோம்பேறிகள் நாடு அல்ல என்பதை பறைசாற்றுகிறது.

புவி வெப்பமயமாதல்


கடவுள் கொடுத்த
வண்ணப்படத்தை
மனிதன் கறுப்பு வெள்ளை

படமாக்கிக் கொண்டிருக்கிறான்

வடகிழக்கு பருவ (வறுமை) மழை



     இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் இருந்து நாள்தோறும் தமிழ் நாட்டிற்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் (கட்ட வேலை, ரயில் பாதை அமைப்பு இன்னும் பிற) கூலி வேலைக்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும், அங்கிருந்து கோயம்புத்தூருக்கும் பயணம் செய்கின்றனர்.

   சென்னை இரயில் நிலையத்திலும், கோயம்புத்தூர் இரயில் நிலையத்திலும் இதனை நாள்தோறும் காணலாம். அப்படி தமிழ்நாட்டிற்காக உழைக்க வருபவர்களுக்கு பயணம் செய்ய போதுமான இரயில் வசதி இல்லை.  குறிப்பாக கவுகாத்தியிலிருந்து எர்ணாகுளம், திருவனந்தபுரம் செல்லும் இரயில் வண்டி ஒன்வொன்றிலும் 5 மடங்கு அதிகமாக பயணிக்கின்றனர்.  இரண்டாம் வகுப்பு படுக்கை அறை வசதி கொண்ட பெட்டிகளில் 100 பேர் பயணம் செய்யலாம்.  ஆனால், குறைந்தது 400 லிருந்து 500 பேர் இதில் பயணம் செய்கின்றனர்.  ஒவ்வொரு படுக்கையிலும் குறைந்தது 2 அல்லது 3 பேர் படுத்துக்கொண்டும், உட்கார்ந்துக்கொண்டும் மிகக் கொடுமையான பயணம் மேற்கொள்கின்றனர்.

    ஒரு பெட்டியிலிருந்து மற்றொரு பெட்டிக்கு பயணம் செய்யும் இடைப்பட்ட பகுதியிலும், ஏறும் இறங்கும் பகுதியிலும் மலைபோல் தங்களது உடைமைகளை குவித்து அதன் மேல் பலர் அமர்ந்தும் பயணம் செய்கின்றனர். 

   இதனால், அப்பெட்டிகளில் துர்நாற்றம் வீசுவதோடு, போதுமான குடிநீர், கழிவறை வசதி இல்லாமல் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.  இவ்வளவு பேர் பயணம் செய்வதால், ஒவ்வொரு பெட்டியிலும் நிரப்பப்டும் தண்ணீர் மிக குறைந்த நேரத்திலேயே தீர்ந்துவிடுவதும் வாடிக்கையாகிவிடுகிறது.

   முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் இன்னும் கொடுமை.  போர்வையால் ஊஞ்சல் கட்டி அதில் படுத்துக்கொண்டு பயணம் செய்கின்றனர். 


 அவர்கள் விடுமுறைக்காக தங்கள் ஊர்களுக்கு பயணம் செய்யும்போதும் இதே நிலைமைதான்.  இது அந்த இரயில்களில் பணிபுரியும் பயணச்சீட்டு பரிசோதகர் முதற்கொண்டு இரயில் நிலைய அதிகாரிகளுக்கும் தெரிந்தும், அவர்களுக்காக அதிக எண்ணிக்கையில் பெட்டிகளை இணைப்பதோ அல்லது மேலும் பல இரயில்களை பயன்பாட்டிற்கு கொண்டுவருவதோ செய்யாமல் நம் மாநில வளர்ச்சிக்காக தங்கள் ஊர், உறவுகளை விட்டு விட்டு உழைக்கும் வடகிழக்கு மாநிலத்தவர்களை நாம் மனிதராகவே மதிக்காமல் நடந்துக்கொள்வது நியாயமா?