Saturday, July 9, 2016

மை


கடந்த வாரம் சனிக்கிழமை மாலை, சத்துவாச்சாரி தெற்கு அவென்யூ சாலை, பகுதி - 2ல் அமைந்திருக்கும் வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு நண்பர் ஒருவரைக் காண சென்றிருந்தேன்.

என் காரை நீதிமன்றத்தின் வெளியே நிறுத்திவிட்டு இறங்கிக் கொண்டிருந்தேன்.
அப்போது, நேர்த்தியாக பேண்ட், சட்டை, ஷுஅணிந்திருந்த 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் என் அருகில் வந்து, "கார் எவ்வளவு மைலேஜ் தருகிறது?" என்று கேட்டார். அதற்கு நான், "ஹைவேயில் சென்றால் 20 வரும் " என்றேன்.


உடனே அவர், "என்னுடைய காரும் மாருதி 800 தான், 1996 மாடல், 25 மைலேஜ் வரும் " என்று கூறி, அருகில் வந்து என்னுடைய காரை பார்த்து "ஓ கேஸ் கிட்டும் இருக்கிறதா?" என்று கேட்க, நான், "ஆமாம், கேஸ், பெட்ரோல் இரண்டும் இருக்கிறது" என்று கூறிவிட்டு நீதிமன்றம் நோக்கி நடந்தேன்.

அவர் என்னுடனே நடந்து வந்து, "நான் என்னுடைய காரை மெயின்டனன்ஸ் எதுவும் செய்வதில்லை ஆனாலும் நல்ல மைலேஜ் கொடுக்கிறது " என்றார்.
நான், "சரி" என்று கூறிவிட்டு நீதிமன்றத்தின் உள்ளே சென்றேன்.
நண்பரை பார்த்து விட்டு திரும்பி வரும்போது அந்த பெரியவர் இருக்கிறாரா? என வழி நெடுக தேடினேன். அவரைக் காணவில்லை. நான் அவரைத் தேட காரணம்,

அவரின்,
முதுமை
தனிமை
வெறுமை

போன்றவற்றின் பாதிப்பில், அந்த வெறுமையான சாலையில் வெறுமையான மனத்துடன் தனிமையில் இணைந்த முதுமையுடன் யாரும் தன்னுடன் பேசாமையால் யாருடனாவது ஏதாவது பேச வேண்டும் என்பதால் என்னுடன் அவர் பேசினார் என்பது என் மனத்தில் கனமாக வலித்தது.

No comments:

Post a Comment